Thursday, July 22, 2010

ஷட்தர்சனம்/ ஆறு ரூபம்

எல்லாரும் வந்தாச்சா? ஆரம்பிக்கலாமா? ஹம்ம், தொப்பையப்பர் & குரு உம்மாச்சி எல்லாரையும் ப்ரார்த்தனை பண்ணியாச்சு, இனிமே கொஞ்சம் மேல பாக்கலாமா.

நம்பாத்துல (தக்குடு மாதிரி) ஒரு சமத்தான கோந்தை இருக்கு, ஆனா அது அவ்ளோ இஷ்டமா எல்லார்டையும் போகமாடேங்கர்து. பெரியப்பாட்ட பேச கூட மாடேங்கர்து, ஆனா சித்தப்பாட்டா நன்னா சிரிச்சு பேசர்து, அதோட மாமாட்டையும் நன்னா ஒட்டிக்கர்து. சரி போ! எப்பிடியோ நம்பாத்து மனுஷாட்ட கொழந்தை வாத்ஸல்யமா இருக்கே!னு அம்மா, தாத்தா, பாட்டி எல்லாரும் திருப்தி பட்டுப்பா. அதை மாதிரிதான் உம்மாச்சி விஷயமும், எல்லாருக்கும் எல்லா உம்மாச்சி கிட்டயும் மனசு லயிக்கர்து இல்லை. அதுக்கு அர்த்தம் அவாளை பிடிக்காதுன்னு எல்லாம் இல்லை, ஆனா இந்த உம்மாச்சிட்ட ஒரு இஷ்டம் உண்டு அவ்ளோதான்.

எப்படி சித்தப்பா பெரியப்பா எல்லாரும் வேற வேற மாதிரி தோனினாலும், அவா எல்லாருக்கும் நம்ப தாத்தாதான் அப்பாவோ, அதே மாதிரி எல்லா உம்மாச்சியும் ஒன்னுதான், ரூபம் தான் வேற வேற.

எதாவது ஒரு ரூபத்லையாவது கோழந்தேள் ப்ரியம் பண்ணமாட்டாளா?ங்கர நல்ல எண்ணத்துல தான் ஆதிசங்கர் உம்மாச்சி ஆறு விதமா உம்மாச்சி ஆராதனையை நமக்காக ஏற்படுத்தி தந்தார்.அதைதான் 'ஷட்தர்சனம்'னு சொல்லுவா (ஷண்மதம்னு சொல்லும் பழக்கமும் உண்டு, ஆனால் தக்ஷிணாம்னாய பீடத்தோட ப்ருதாவளியில் 'ஷட்தர்சன ஸ்தாபனாசார்ய'னு வார்த்தை ப்ரயோகம் இருக்கர்துனால அடியேனும் அதையே உபயோகிக்கிறேன்).

சங்கரர் குட்டியூண்டு பையனா காலடில இருந்த போது ஒரு நாள் பிக்ஷை எடுக்கப் போனாராம். அன்னிக்கி நல்ல த்வாதசி திதி. நேரா போய் ஒரு ஆத்து வாசல்ல நின்னுண்டு ‘மாதா பவதி பிக்ஷாம் தேஹி!’னு குரல் குடுத்தாராம். அவாத்துல இவருக்கு குடுக்கர்துக்கு ஒன்னுமே இல்லையாம், அவாத்து மாமிக்கு ஒரே அழுகையா வந்துதாம், ‘ஓஓஓ! இவ்ளோ அழகா இருக்கும் இந்த கோந்தைக்கு குடுக்கர்துக்கு ஒன்னுமே இல்லையே எங்காத்துல!’னு ரொம்ப வருத்தப்பட்டாளாம், அப்பரம் ஒசரத்துல கூடைல இருந்த ஒரு தக்குனூண்டு நெல்லிக்காயை கொண்டு போய் பிக்ஷாபாத்ரத்துல போட்டாளாம்.



சங்கரார்கு அவாளோட முகத்தை பாத்த மாத்ரத்துல விஷயம் புரிஞ்சு போய், உடனே மனசுல மஹாலெக்ஷ்மி உம்மாச்சியை ‘கனகதாராஸ்தோத்ரம்’ சொல்லி தியானம் பண்ணினாராம். அவாளும் ‘டஷ்ஷ்ஷ்!’னு வந்துட்டாளாம். ‘இவாளோட கர்மா இன்னும் தீரலையே கோந்தை! அப்பரம் எப்பிடி இவாளுக்கு ஐஸ்வர்யத்தை குடுக்க முடியும்?’னு கேட்டாளாம், அதுக்கு உடனே நம்ப சங்கரர் உம்மாச்சி, ‘அப்பிடி எல்லாம் நீங்க சொல்லக் கூடாது, தாயார் குடுக்கனும்னு நினைச்சா யாராலையும் அதை தடுக்க முடியாது, தானம் பண்ணனும் அப்பிடிங்கர இந்த நல்ல குணத்தை மனசுல வெச்சுண்டு இவாளுக்கு நீங்க அனுக்ரஹம் பண்ணித்தான் ஆகனும்!’னு கொழந்தை முகத்தோட கெஞ்சி கேட்டோனே, கருணையே வடிவான நம்ப மஹாலக்ஷ்மி உம்மாச்சியால ஒன்னுமே சொல்ல முடியலையாம், உடனே அவாம் முழுவதும் ஸ்வர்ண நெல்லிக்காய் மழை மாதிரி கொட்டிருத்தாம்.

சங்கரர் உம்மாச்சி ஜனனம் பண்ணின சமயம் ஒரு ஒழுங்கு இல்லாம எல்லாரும் அலைபாஞ்சுண்டு இருந்தா, அப்புறம் இவர்தான் எல்லாத்தையும் ஒழுங்கு பண்ணி அழகா ஆறு விதமா பிரிச்சு குடுத்தார்.

காணாபத்யம்
கௌமாரம்
சைவம்
வைணவம்
சாக்தம்
சௌரம்

இன்னிக்கி கணேச சதுர்த்திக்கு கோக்கட்டை(கொழுக்கட்டை),கிருஷ்ண ஜெயந்திக்கு அதிர்ஸம்,ரவாலாடு,முள்ளு தேங்குழல்,சக்கரச்சீடை,தேங்காசீடை, முக்கியமா பால் திரட்டிப்பால், ஹனுமத் ஜெயந்திக்கு வடை எல்லாம் நமக்கு கிடைக்கர்துக்கு அவர்தான் காரணம். அற்புதமான இந்த ஸனாதன தர்மத்தை காப்பாத்தி எல்லா உம்மாச்சிக்கும் ஹாப்பி பர்த்டே! சொல்லர்துக்கு காரணமான அவருக்கு நாம எல்லாருமே கடமை பட்டு இருக்கோம்.

வரக் கூடிய பதிவுகள்ல இந்த ஆறு விதமான ஆராதனை பத்தி கொஞ்சம் தகவலும் வழக்கம் போல ஒரு குட்டி உம்மாச்சி ஸ்லோகமும் சொல்லலாம்னு தக்குடு கோந்தை மனசுல நினைச்சுண்டு இருக்கு. உம்மாச்சி அனுக்ரஹத்துல நல்ல படியா வரணும். சரி, இந்த வாரத்துக்கான உம்மாச்சி ஸ்லோகம் & அர்த்தம் பாக்கலாமா?

//ச்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் நமாமி பகவத்பாதம்
சங்கரம் லோக சங்கரம்//

ஸ்லோகத்தோட அர்த்தம் - வேதங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராணங்களின் ஆலயமாகவும், பரம கருணாமூர்த்தியாகவும் இருக்கும் சங்கரபகவத்பாதரை பணிகிறேன்.

சங்கரம் அப்பிடின்னா மங்களம்னு அர்த்தம், யாருக்கு மங்களம்? லோகத்துக்கே மங்களமாய் அமைந்தவர். மங்களம் அப்பிடிங்கர்து பொதுவான ப்ரயோகம், எப்பிடி எல்லாம் இருக்குன்னா? வித்யார்த்திகளுக்கு நல்ல கல்வியறிவு மங்களம், வியாபாரத்ல உள்ளவாளுக்கு தனம்தான் மங்களம், கல்யாணம் ஆன ஸ்த்ரீகளுக்கு ஸத்புத்ராதிகள் மங்களம், வயசானவாளுக்கு முக்திதான் மங்களம்.

சம்-கரோ-இதி சம்கரஹா = நன்மையை மட்டும் செய்பவனே சங்கரன்.