Friday, June 25, 2010

குரு/ஆச்சார்யன்

எல்லாரும் செளக்கியமா இருக்கேளா? இந்த பதிவுல குரு உம்மாச்சியை பத்தி நாம எல்லாரும் கொஞ்சம் பாக்கலாமா?

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே.



குரு - அப்படின்னா ஆசிரியர், ஆசான் அப்படின்னு பல வார்த்தை ப்ரயோகங்கள் இருக்கு. எந்த ஒரு கார்யமானாலும் கணபதிக்கு அடுத்தபடியா நாம ப்ரார்த்தனை பண்ண வேண்டிய ஒரு உம்மாச்சி இந்த குரு. ‘உம்மாச்சியே உலகத்துல கிடையாதே!’னு வாய் வலிக்காம சொல்லிக்கர சில மனுஷா கூட தான் இன்னாருடைய சித்தாந்தத்தை பின்பற்றி நடக்கறேனாக்கும்!னு தன்னுடைய குருவின் பெருமையை சொல்லாம இருக்கமாட்டா. அப்பேற்பட்ட மஹாத்மியம் உள்ள உம்மாச்சி இந்த குரு.

குரு-ங்கர சப்தத்துக்கு பக்கத்தில் அழைச்சுண்டு போறவர்நு ஒரு அர்த்தம் உண்டு. எதோட பக்கத்தில் அழைச்சுண்டு போவார்?னு நாம திருப்பி கேட்டோம்னா, அது நமக்கு வாய்ச்ச குருவை பொறுத்து வித்யாசப்படும். நாம போகும் போதே ஐஸ்வர்யங்களை நினைச்சுண்டு போறோம், நிறையா காசு பணம் வரனும், அழகு சுந்தரியா ஆத்துக்காரி வரனும், லட்டு மாதிரி குழந்தேள் பொறக்கனும், அரண்மனை மாதிரி வீடு கட்டனும்(முக்கியமா பக்கத்தாத்தை விட அழகா இருக்கனும்),படிச்ச படிப்பை விட பெரீய உத்யோகம் கிட்டனும் இப்படியெல்லாம் நம்ம ப்ரார்தனை இருக்கர்துனால அதுக்கு செளகர்யமா உள்ள குருவா நாம தேட வேண்டி இருக்கு, யாராவது பிரம்மத்தை தெரிஞ்சுக்கனும், நல்ல சித்தாந்த ஞானம் வரனும், திருப்தியான மனசு வேணும்! அப்படியெல்லாம் யோசிக்கரோமா? ஒரு கதை உண்டு,

சுப்புணி மாமா நு ஒரு மாமா இருந்தாராம், அவருக்கு குடும்பம், பந்த பாசம் எல்லாம் விட்டுட்டு காட்டுக்கு போய் தபஸ் பண்ணனும்னு ஒரு ஆசை இருந்துதாம். ஒரு நாள் மத்யானம் நன்னா சுகமா அவாத்து மாமி சமையலை சாப்டுட்டு ஈச்சர் சேர்ல தாச்சுண்டு இருக்கும் போது, தனக்கு தானே சொல்லி பாத்துண்டாராம், ஏ சுப்புணி! உன்னோட பொறுப்பு எல்லாம் கழிஞ்சுருத்துடா! மூத்த பையனுக்கு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணியாச்சு, இளைய பொண்ணை MS படிச்ச ஒரு US மாப்பிள்ளை(இளிச்சவாயன்) தலைல கட்டியாச்சு, பாக்யத்துக்கும்(அவாத்து மாமியோட பேரு)கடைசி காலம் வரைக்கும் காணர மாதிரி ஸ்டேட் பாங்கல FD போட்டு வெச்சாச்சு, இனிமே தைரியமா நாம காட்டுக்கு போய் தபஸ் பண்ணலாம்!னு தனக்கு தானே சொல்லிண்டாராம்.

காட்டுல குளுருமே?னு யோசிச்சுட்டு நல்ல கம்பளி போர்வை மேலும் இன்ன பிற சாமான் செட்டெல்லாம் எடுத்துண்டு காட்டுக்கு போகர்துக்கு ரெடி ஆனாராம், எல்லாம் ரெடி பண்ணி முடிக்கும் போது மத்யானம் 3 மணி ஆயிடுத்தாம், யே பாக்யம்! நான் காட்டுக்கு போய் தபஸ் பண்ண போறேன்டி!னு பெருமையா சொன்னாராம். அரை தூக்கத்துல இருந்த பாக்யம் மாமி, 'எங்க வேணும்னாலும் போய்ட்டு வாங்கோ! என்னோட ப்ராணனை வாங்காம இருந்தா சரி!'னு சொல்லிட்டு அந்த பக்கமா திரும்பி படுத்துண்டாலாம். சுப்புணி மாமா விடாமா, 3 மணி பால்காரன் வர நேரம் ஆகர்து! ஒன்னோட கையால ஒரு காபியை போட்டு தந்தைனா தெம்பா குடுச்சுட்டு போவேன்!னு அவர் சொன்னதுக்கு மாமிடேந்து பதிலே வராததால சரி கிளம்புவோம்!னு கிளம்பி வெளில வந்தாராம். வாசல் வந்தவர் அங்க வெளில இருந்த வெண்கல சொம்பை பாத்துட்டு, யே பாக்யம்! எத்தனை தடவை சொல்லியிருக்கேன்டி! வெண்கல சொம்பை அச்ரத்தையா வெளில வெக்காதீங்கோ! வெக்காதீங்கோ!னு, வெண்கலம் விக்கர விலைல திருப்பி வாங்க முடியமா?னு சொல்லிட்டு, இப்படி போப்பு(தக்குடு பாஷையில் பொறுப்பு) இல்லாம இருக்கர இவாளை நம்பி நான் எப்படி காட்டுக்கு போக முடியும்!னு சொல்லிண்டே ஆத்துக்குள்ள போய்ட்டாராம். இந்த மாதிரி சுப்புணிகள் அவாளுக்கு ஏத்த மாதிரியான குருவைதான் செலக்ட் பண்ணிப்பா.


குருங்கப்பட்டவருக்கு வயசு வரையறை எல்லாம் கிடையாது, தன்னோட கைல இருக்கர நல்ல சாமானை அடுத்தவாளுக்கு சிரிச்ச முகத்தோட ஒரு குழந்தை கொடுக்கர்தை நாம பாத்துட்டு நாமளும் அந்த குணத்தை கத்துண்டோம்னா அந்த குழந்தை நமக்கு குருதான். ஊருக்கு வெளில 3 கிலோமீட்டர் இடத்துல ஒரு ஆசிரமும், 4 அடிக்கு தலைல முடியும், வெண்ணையா ஒரு முகமும் இருந்துட்டா அவர்கள் எல்லாரும் ஆச்சார்யன் ஆகிட முடியாது, அதுக்கு ஒரு பாரம்பர்யம், பல வித்யைகளில் தேர்ச்சி, 'தான்' என்னும் எண்ணம் கிஞ்சித் அளவும் இல்லாத உயர்ந்த அறிவு உள்ளவரா இருக்கனும். அந்த மாதிரி ஒரு நல்ல குரு கிடைக்கர்துக்கும் யோகம் இருந்தாதான் கிடைக்கும்.

ஸ்ரீவைஷ்ணவத்தில் ஆச்சார்யன்! ஆச்சார்யன்!னு ரொம்ப சிலாகிப்பார்கள். ஸ்ரீவித்யா உபாசனையிலும் குருவுக்கு மகத்தான ஒரு இடம் உண்டு. முக்கியமா சொல்லனும்னா சீக்கியர்களுக்கு அபாரமான குருபக்தி உண்டு. எது கிடைச்சாலும் குருவின் கருணை!னு நினைக்கும் மனோபாவம் அவாளுக்கு உண்டு. ஸிம்மம் மாதிரியான வீரம், ஆக்ரோஷம் உள்ளவாளா இருந்தாலும் குருவிடம் அவர்களை போல ஒரு பவ்யம் பாக்க முடியாது.

சில குருமார்களோட பெருமையை பாத்தேள்னா அது அவாளோட சித்தாந்தத்தால மட்டும் இருக்காது, அந்த ஆச்சார்ய புருஷர்களோட உயர்ந்த சீலத்தால பல நூற்றாண்டுகளுக்கு அவாளோட கீர்த்தி நிலைச்சு இருக்கு. உதாரணத்துக்கு ஸ்ரீஆதிசங்கரர்,ஸ்ரீராமானுஜர்,ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள்,ஸ்ரீ ஷீரடி சாய்பாபானு பல அவதார புருஷாளை சொல்லிண்டே போகலாம். சரி ஒரு குரு உம்மாச்சி ஸ்லோகம் பாப்போமா இப்போ?



குரவே ஸர்வலோகானாம் பிஷஜே பவரோகினாம் நிதையே ஸர்வவித்யானாம் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தையே நமஹா!

(ஸர்வ லோகங்களுக்கும் குருவாய் இருப்பவரே! ஸம்ஸாரம் எனும் நோய்க்கு மருந்தாக அமைந்தவரே! ஸகல வித்யைகளுக்கும் உறைவிடமாய் திகழ்பவரான தக்ஷிணாமூர்த்தியே உம்மை பணிகிறேன்)